Thursday, October 28, 2010

உன்னைவிட்டுப் போகும்போது....


ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
நீ அவருக்குப் புரிந்துகொள்ளவே முடியாத
ஒரு விடுதலையை அளிக்கிறாய்

பதட்டமடையாமல்
அவருக்கு நீ விடைகொடு

ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
உன்னுடைய நிழல் இல்லாமல்
அவர் தன்னைத் தானே பார்த்துக்கொள்ள
அனுமதிக்கிறாய்

எந்தக் குற்ற உணர்ச்சியையும்
ஏற்படுத்தாமல் அவரைப் போகவிடு

ஒருவர்
உன்னைவிட்டுப் போகும்போது
உன்னுடைய பழக்கங்கள் மாறுவதுபோலவே
அவரது பழக்கங்களும் மாறிவிடுகின்றன

போகும்போது அவருக்கு நீ
எதையும் மறுக்காதே

ஒருவர்
உன்னைவிட்டுப் போகும்போது
ஒரு சுவருக்கு அந்தப் பக்கமாய்
போவதாகவே அவர் உணர்கிறார்

நீ அவருக்கு
நல்வாழ்த்துக்களைத் தெரிவி

ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
எதையோ
கொஞ்சம் இழக்கிறாய்

அவரும் எதையோ
கொஞ்சம் இழந்துதான் போகிறார்
என்பதால் நீ துக்கமடையவேண்டியதில்லை

ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
நீ இனி அவருக்குத் தர ஒன்றுமே
இல்லை என்பதால்தான் போகிறார்

நீ அவருக்கு
உன்னிடம் இருப்பதிலேயே
சிறந்த ஒன்றை அப்போது
பரிசளித்துவிடு

ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
இனி எப்போதும் திரும்பவே மாட்டார்
என்றுதான் நினைக்கிறாய்

அந்தக் கணத்தின் அன்பை
அந்தக் கணத்தின் வெறுப்பை
அவருக்கு முழுமையாகக் காட்டு

ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
அவர் வெளிச்சத்தை நோக்கிப் போவதாக
ஒரு கணம் உணர்கிறார்

நீ அப்போது
ஒரு காதல் கவிதையை
எழுதாமலிரு

-மனுஷ்ய புத்திரன்-

No comments:

Post a Comment