Wednesday, March 2, 2011

மனுஷ்ய புத்திரன் கவிதைகள்

இதற்குத்தானா?



பார்க்காமலே
இருந்திருக்கலாம்

பார்த்தும்
பாராததுபோல் போயிருக்கலாம்

பார்க்க வந்தது
உன்னயல்ல என்று சொல்லியிருக்கலாம்

பார்த்த பின்னே
பாராமுகமாகவாவது இருந்திருக்கலாம்

பார்த்துப் பார்த்து ஏங்கவா
இவ்வளவு துரம் வந்தது?



அங்கேயே

இன்று உனக்குத் தர
என்னிடம்
எதுவுமே இல்லையென்று
உனக்கும் தெரியும்

இருந்தும் அங்கேயே
பிடிவாதமாக அமர்ந்திருக்கிறாய்

என்னைவிடவும் அதிகமாக
அதை மறைத்துக்கொண்டு

எப்போதையும்விட அதிகமாக
அதை மன்னித்துக்கொண்டு


புகார்

இதையெல்லாம்
ஒரு புகாராகச் சொல்ல
எனக்கும்
அவமானமாகத்தான் இருக்கிறது

என்னைப் பற்றி
சொல்லிக் கொள்ள
எனக்கு அந்த ஒரு வழிதான்
இருக்கிறது


மழையில் ஒருத்தி


மழையில் ஒருத்தி
ஈரத் தலையைத் துவட்டுகிறாள்
ஈர ஆடையைப் பிழிகிறாள்
ஈரக் குடையை உதறுகிறாள்
ஈரக் கைகளைத் தேய்த்துக் கொள்கிறாள்
ஈரத்தைத் தாண்டிக் குதிக்கிறாள்
ஈரத்திலிருந்து ஒதுங்கி நிற்கிறாள்
தான் தான்
இந்த மழையை
ஈரமாக்குகிறோம்
என்றுணர்ந்த ஒரு கணத்தில்
சிரித்துக்கொண்டே
மறுபடியும்
மழையில் இறங்கி நடந்து போகிறாள்


புறப்பாடு


அந்தி கூடியதும்
நல்ல வெந்நீரில் குளிக்கிறாள்

தலையை அவ்வளவு நேர்த்தியாக
வாரிக்கொள்கிறாள்

ஆழ்ந்த லயிப்புடன் ஒப்பனையிட்டு
முகத்தை திருத்தமாக நேர் செய்கிறாள்

முக்கியமான தினங்களில்
மனமுவந்து ஏற்கும் ஆடையையே
மீண்டும் தேர்வு செய்கிறாள்

அவளது மன நிலையினை
சற்றே இடம் மாற்றும்
அந்த வாசனை திரவியத்தை
தெளித்துக் கொள்கிறாள்

ஆபரணங்களைக் கவனமாக
அணிந்துகொள்கிறாள்

சமையலறையில் அடுப்பை அணைத்துவிட்டோமா
எலலாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட்டோமா
என்று சரிபார்த்துக்கொள்கிறாள்

பிறகு
கண்ணாடியில் சற்றே
தன்னை உற்றுப் பார்க்கிறாள்
அவளை
அவளுக்கு
அவ்வளவு பிடித்திருக்கிறது

இனி
அவள் செய்வதற்கு
அங்கே ஒன்றுமே இல்லை
எல்லாம் செய்யப்பட்டு விட்டது
எல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்டுவிட்டது

நேரமாகிவிட்டதா என
கடிகாரத்தைப் பதற்றத்துடன் பார்த்தபடி
காலணிகளைத் தேடுகிறாள்

சட்டென ஒரு கணம்
எதையோ நினைக்கிறாள்

அலமாரியைத் திறந்து
ஒரு சிறிய மாத்திரையை எடுக்கிறாள்

படுக்கைக்குச் சென்று
அமைதியாக நித்திரையில்
ஆழ்கிறாள்



ஒரு பாதை, ஒரு பிரார்த்தனை


இருப்பதிலேயே

கடினமான பாதையைத்
தேர்வு செய்கிறேன்
இந்தப் பயணம் எந்தவிதத்திலும்
இலகுவாகிவிடக் கூடாது என்பதற்காக

கண்ணீர் மல்க
பிரார்த்தனை செய்கிறேன்
இவ்வளவு பிரயாசையுடன்
உன்னைத் தேடி வரும் நாளில்
நீ அங்கே இருக்கக் கூடாது என்பதற்காக


வேறெப்படியும்


நான் அனாவசியமாக
ஒரு வெறுப்பைக் காட்டுகிறேன்

சம்பந்தமில்லாமல்
ஒரு உதாசீனத்தைக் காட்டுகிறேன்

வேறெப்படியும்
இந்த இடத்தைவிட்டுப்
போக முடியாது


சார்தல்


எனக்கு
வேண்டியதனைத்தையும்
நானே
ஒழுங்குபடுத்திக் கொள்கிறேன்

இந்த மாத்திரைகளை மட்டும்
யாராவது
எடுத்துத் தரவேண்டும்


இனி


யாரையும்
விரும்பவில்லை

இனி
யாரோடும்
இருக்கலாம்


அறியும் வழி


உன்னைப் பற்றிக் கொள்ளவே
முடியாதென
புரிந்த நாளில்தான்
எனக்குத் தெரிந்தது
இவ்வளவு நாளும்
உன்னை
எவ்வளவு
பற்றிக்கொண்டிருந்தேன்
என்பது

இழக்கவே முடியாதது
எதுவெனத் தெரிந்துகொள்ள
அதை
இவ்வளவு
இழக்க வேண்டுமா?


யாருக்குமே


இவ்வளவு
அழகாக இருந்தால்
யாருக்குமே
வெறுக்கத்தான் தோன்றும்


திரும்பும்போதும்


நீண்ட படிக்கட்டுகளில்
இறங்கிச் செல்கிறேன்

நான் வரும்போது
இங்கே
இத்தனை படிகள்
இருக்கவே இல்லை


இப்போதுதான் தெரியும்



இந்தப் பின்னிரவில்
இத்தனை தனியாக
வீடு திரும்பும்போதுதான்
தெரிகிறது

என்னைப் பற்றி
நினைத்துக் கொள்ள
எனக்கு
இவ்வளவு
இருக்கிறது என்று


நடனம் மூன்று குறிப்புகள்


1
நடனமாடுபவர்களுக்கும்
நடனத்திற்கு கைதட்டுபவர்களுக்கும் இடையே
நடனம்
தனியே நிகழ்ந்துகொண்டிருக்கிறது

2
நடன மங்கை
ஆட அழைக்கும் ஒவ்வொரு கரத்தையும்
புன்னகையுடன் மறுதலிக்கிறாள்

பிறகு நடனத்தை தொடர்கிறாள்
அங்கே இல்லவே இல்லாத
யாரோ ஒருவருடன்

3
மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறோம்
நமக்கு நடனமாடத் தெரியாது என்று சொல்ல
அங்கே யாருமே இல்லை


தேடல்


தவறாக அழைக்கப்பட்ட
தொலைபேசி எண்ணின்
மறுமுனையிலிருந்து
யாரோ ஒரு குழந்தை
அப்பா நீ எங்கேயிருக்கிறாய்
என திரும்பத் திரும்ப
கேட்டுக் கொண்டேயிருக்கிறது

நான்
அதன் அப்பா இல்லை
என சொல்லி முடிப்பதற்குள்
என் வீடுவரை
தேடி வந்துவிட்டது


கடைசியாக


ஒரு அன்பில்
கடைசியாக மிஞ்சுகிறது

ஒரு அன்பின் சின்னம்
மட்டும்


தடயம்


ஒரு அன்னிய இடத்தைப்
பயன்படுத்தும்போது
எல்லாவற்றையும்
நேர்த்தியாக கையாள்கிறோம்

எந்த சந்தேகமும் வராதபடி
எல்லாவற்றையும்
அதனதன் இடத்தில்
மறுபடி வைக்கிறோம்

ஒரு
ஈரத் துண்டை
என்ன செய்வதென்று மட்டும்
ஒருபோதும் தெரிவதில்லை


காலியிடங்கள்


பறவைகள் இறந்த பிறகு
காலி பறவைக் கூண்டுகள்

மீன்கள் இறந்த பிறகு
காலி மீன் தொட்டிகள்

வளர்ப்பு நாய்கள் இறந்த பிறகு
காலி நாய்ச் சங்கிலிகள்

தொட்டிச்செடிகள் அழுகிய பிறகு
காலித்தொட்டிகள்

மனிதர்கள் இறந்து போகிறார்கள்
மற்றெதையும் போல
அவ்வளவு தெளிவாக
இருப்பதில்லை
அது


வேறெப்போதும்


தனது முதல் பல் விழுவதை
உற்றுப் பார்க்கும் சிறுவன்

தனது ருதுவின் முதல் குருதியை
உக்கிரமாய் உணரும் சிறுமி

தனது முதல் நரையை பிடுங்கும்
ஒரு மனிதன்

தனது முதல் காதலை இழக்கும்
ஒரு தருணம்

வேறெப்போதும் அறியவில்லை
அவ்வளவு தூய தனிமையை


பரஸ்பரம்


பண்டிகைக்கு முதல் நாள்
குழந்தைக்கு புத்தாடை வாங்க
பணம் கேட்பவன்
குழந்தைக்கு உடல் நலமில்லை
எனப் பொய் சொல்கிறான்

கடவுள் அவனை
கொஞ்சம் மன்னிக்கிறார்
அவனும் கடவுளை
கொஞ்சம் மன்னிக்கிறான்


ஒன்றும் நிகழவில்லை

பண்டிகைகள் வந்து
பண்டிகைகள் போகின்றன

அதே இடத்தில்
அப்படியேதான்
இருந்துகொண்டிருக்கிறேன்


முதல் நினைவு

முதல்நாள் பள்ளிக்குப்
போகும் குழந்தை
எப்போது வீட்டுக்குப் போவோம்
என்பதையே
பனித்த கண்களுடன்
நினைத்துக்கொண்டிருக்கிறது

பிறகு
கற்றுக்கொண்ட அனைத்தையும்
அது மறந்துவிடுகிறது
வாழ்நாள் முழுக்க
இந்த ஒரு பழக்கத்தைத் தவிர


சாம்பல் நிறத் துயில்


அதிகாலையில்
பணியிலிருந்து திரும்பும் நங்கை
ஒரு சாம்பல் நிறப்
பொழுதினைப் பார்க்கிறாள்
ஒரு தேநீர்க் கோப்பையின்
சாம்பல் நிற ஆவியிலிருந்து
பிறக்கும் ஒரு உலகினைப் பார்க்கிறாள்

ஒரு பகலின் நொடியினைவிட
ஒரு இரவின் நொடி புதிர் மிகுந்தது

எங்கெங்கும்
ஏதோ ஒன்று துவங்குகையில்
எல்லாவற்றையும்
முடித்து வைப்பதற்கு மனமில்லாமல்
சாலையோரம் உதிர்ந்துகிடக்கும்
ஏதோ மலரைக் கையில் எடுக்கிறாள்
அது தன்னுடைய நாளின் மலரல்ல
என்று புன்னகையுடன்
திரும்ப வைக்கிறாள்

ஒரு பகலின் சாத்தியங்களைவிட
ஒரு இரவின் சாத்தியங்கள்
எல்லையற்றவை

எந்த ஒரு பகலையும்விட
ஒரு தூக்கமற்ற இரவு
அவளது புலன்களைப்
பிரகாசிக்க வைக்கிறது
புலர்ந்து வரும் பொழுதின்
ஒவ்வொரு கண் விழிப்பிற்கும்
ஒவ்வொரு மணியோசைக்கும்
தலை வணங்குகிறாள்
அவை வேறொரு உலகின் அழைப்பு
என்றுணரும்போது திடுக்கிடுகிறாள்

ஒரு பகலின் நினைவுகளைவிட
ஒரு இரவின் நினைவுகள்
கருணையற்றவை

சூரியனின் ஒரு கிரணத்தில் தொடங்கி
இன்னொரு கிரணத்தில் முடியும்
ஒரு வாழ்க்கையின்
புராதன சுழற்சியிலிருந்து
முற்றாக நீங்குகிறாள்
அது அவளது உடலை
எடையற்றதாக மாற்றுகிறது
அவளது மெல்லிய இமைகளைக்
கனத்துப்போகச் செய்கிறது

ஒரு பகலின் குரல் கேட்பதேயில்லை
ஒரு இரவின் குரலை மௌனமாக்கவே முடிவதில்லை

அணைத்துக் கொள்ள வேண்டும்
என்று விரும்புகிறாள்
தனியே
அதிகாலையின்
சாம்பல் நிறத் துயிலில்
வீழ்கிறாள்
ஆழமாக
வெகு ஆழமாக
ஒரு சாம்பல் நிறக் கனவு
காண்கிறாள்

ஒரு பகல் என்பது
ஒரு வேலை நேரம்
ஒரு இரவு என்பது
இன்னொரு வேலை நேரம்


அகல்

கார்த்திகை நாளில்
சின்னஞ் சிறுமகள்
ஒவ்வொரு அகல் விளக்காகத்
துடைத்து வைக்கிறாள்

என் இறந்த காலத்திற்கு
இனி நான் ஒருபோதும்
திரும்ப மாட்டேன்


-மனுஷ்ய புத்திரன்-

No comments:

Post a Comment